இந்த ஜனவரியில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) 5.2 சதவீத அளவில் ஏற்பட்ட உயர்வு, மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு நல்ல புத்தாண்டு செய்தியாகதான் தோன்றும். குறிப்பாக, முந்தைய ஐந்து மாதங்களில் இரண்டு மாதங்களில் பின்னடைவைக் கண்ட ஒரு அளவீட்டுடன் ஒப்பிடும்போது அதுபோலத் தோன்றலாம். 2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் உற்பத்தித் துறையின் பொருளாதாரத்தில் மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) 3.6 சதவீதமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் 2022 வரையிலான காலாண்டில் 1.1 சதவீதமாகவும் ஆகவும் சுருங்கியுள்ள நிலையில், இந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு இந்த போக்கை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், ஜனவரியின் தொழிற்சாலை உற்பத்தி தரவுகள் போதுமான ஊக்கத்தை தரவில்லை என்றாலும் மிதமான ஊக்கத்தை தருகின்றன. ஒன்று, இந்த உயர்வு முந்தைய காலாண்டு சராசரியான 2.6 சதவீத மந்தமான வளர்ச்சியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். தவிர, 2022ஆம் ஆண்டு டிசம்பரின் உற்பத்தி அளவுகளோடு ஒப்பிட்டால், 4.7 சதவீதம் முன்னேற்றத்தையும் குறிக்கிறது. மின்சாரம் மற்றும் மூலதனப் பொருட்களின் இரட்டை இலக்க வளர்ச்சி ஐஐபியை உயர்த்தியது. முதன்மை பொருட்களில் 9.6 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருந்ததும் சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு பொருட்களில் 8 சதவீத அளவிலான அதிகரிப்பு (இரண்டுமே மூன்று மாதங்களில் ஏற்பட்ட மிகக் குறைந்த வளர்ச்சி) இருந்ததும் உதவியது. உற்பத்தி 3.7 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இது டிசம்பரில் இருந்த 3.1 சதவீத அதிகரிப்பைவிட சற்று அதிகம். ஆனால் கண்காணிக்கப்பட்ட 23 துணைத் துறைகளில் 10 துறைகள் உற்பத்தியில் பின்னடைவைப் பதிவுசெய்தன. அவற்றில் ஐந்து ஜனவரி 2022 அளவுகளிலிருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தன. ஜவுளி தொழிற்சாலைகள் 11 சதவீதமும், மரப் பொருட்கள் உற்பத்தி 12.6 சதவீதமும், ஆடை உற்பத்தி 22.3 சதவீதமும், கணிணி மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தி 29.6 சதவீதமும் சரிந்திருக்கின்றன. 2022-23ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில்
மின்சாதனங்கள், கணினிகள், மருந்தகம் மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த ஜவுளி, ஆடை மற்றும் தோல் உள்ளிட்ட ஏழு துறைகள் உற்பத்தி சரிவைச் சந்தித்திருக்கின்றன. சர்வதேச தேவை பலவீனமடைவது நிச்சயமாக தொழிற்சாலை ஆர்டர்களை பாதிக்கிறது. தவிர, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு முக்கியமான சந்தையான அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் கடுமையான நாணயக் கொள்கை கண்ணோட்டமும் நல்லதல்ல. வெள்ளியன்று, ஐஐபி தரவுகள் வெளியிடப்பட்டபோது, சர்வதேச எண்ணெய் விலைகள் மேலும் 1.3 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. காரணம், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுகள் தேவையையும் (ஏற்றுமதி ஆர்டர்களையும்) பாதிக்கும் என்று சந்தைகள் எதிர்பார்க்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்.பி.சி) உறுப்பினர்கள் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கூடும்போது, உள்நாட்டு தேவை எப்படி தாக்குப் பிடிக்கிறது என்பது பற்றிய கவலைகளும் அதே அளவில் இருக்கும். இரண்டு எம்.பி.சி உறுப்பினர்கள் ஏற்கனவே அதன் பிப்ரவரி கூட்டத்தில் வட்டி விகிதங்கள் அச்சுறுத்தும் வகையில் மிக அதிகமாக மாறுவது குறித்த கவலைகளை சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதில் ஒருவர் இந்தியாவின் வளர்ச்சியை ‘மிகவும் பலவீனமானது’ என்றும் அழைத்தார். ஜனவரி ஐஐபியில் நுகர்வோர் பொருட்களின் உற்பத்திப் புள்ளிவிவரங்களிலிருந்து வரும் சமிக்ஞைகளும் உற்சாகம் தருவதாக இல்லை. நுகர்வோர் சாதனங்களின் உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு கடுமையாக சரிந்திருந்தாலும், இது கொரோனாவுக்கு முந்தைய அளவைவிட கிட்டத்தட்ட 15 சதவீதம் குறைவாக இருந்தது. நீடித்து நிலைக்காத நுகர்வு பொருட்கள் 6.2 சதவீதம் வளர்ந்திருக்கின்றன. இது கடந்த மூன்று மாதங்களில் மிக மெதுவான வேகமாகும். இந்த ஆண்டு மொத்த உற்பத்தி 2021-22 அளவைவிட இன்னும் குறைவாகவே உள்ளது. கே வடிவ மீட்பு (ஒரு துறை மெதுவாகவும் இன்னொரு துறை வேகமாகவும் வளர்வது) அதிகாரப்பூர்வமாக மறுக்கப்படலாம். ஆனால் தொழில்துறை சுட்டிக்காட்டுவதெல்லாம் குறைந்த வருமானத்திலும் ஊரகத் துறைகளிலும் மெதிவான மீட்சியைதான். இன்னும் எல்லாம் சரியாகவில்லை.
This editorial has been translated from English, which can be read here.