கணிசமான எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் சட்டம் இயற்றுவது சட்டமியற்றும் மன்றம் பற்றிய நல்ல பிரதிபலிப்பாக இல்லை. 140க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில் நடப்பு கூட்டத்தொடரில் இந்தியாவில் குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. பாரதீய நியாய சன்ஹிதா (ஐபிசிக்கு மாற்றாக இருக்கும் பி.என்.எஸ்), பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு மாற்றாக இருக்கும்) மற்றும் பாரதீய சாக்ஷயா மசோதா (ஆதாரச் சட்டத்திற்கு பதிலாக இருக்கும்) ஆகியவற்றின் திருத்தப்பட்ட பதிப்புகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டாலும், முழு நாட்டிற்குமான அவற்றின் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு முழு அவைகளிலும் விவாதங்களை அவை கோரின. விளைவாக இந்த மசோதாக்கள் ஏற்படுத்திய பல கவலைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியவில்லை. பிரிவுகளை மறுசீரமைப்பதைத் தவிர, அசல் சட்டங்களின் பெரும்பாலான மொழி மற்றும் உள்ளடக்கங்கள் தக்கவைக்கப்பட்டிருப்பதுதான் புதிய சட்டங்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கின்றன. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டத்தின் காலனித்துவ முத்திரை முழுவதுமாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக இந்திய சட்டக் கட்டமைப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது சரியானதாக இருக்காது. காரணம், நாட்டைக் காவல் செய்யும் முறை, குற்றங்கள் விசாரிக்கப்படும் முறை மற்றும் நீண்ட விசாரணைகள் நடத்தப்படும் விதத்தில் எந்த மாற்றத்தையும் புதிய சட்டங்கள் முன்வைக்கவில்லை.
காலாவதியான தேசத்துரோகப் பிரிவை நீக்குவது, அரசுக்கு எதிரான அதிருப்தியைத் தூண்டுவது அல்லது வெறுப்பு மற்றும் அவமதிப்புக்கு உட்படுத்துவது இனி குற்றமல்ல என்பதுதான் பி.என்.எஸ்ஸின் மேம்பாடுகளில் ஒன்று. தவிர, (ஒரு நபரின் இனம், சாதி, சமூகம், பாலினம், மொழி அல்லது பிறந்த இடத்தின் அடிப்படையில் மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துவது போன்ற வெறுப்பு குற்றங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக) கும்பல் கொலைகளை ஒரு தனி குற்றமாக அறிமுகப்படுத்துவதும் இதில் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட திருமணம் தாண்டிய உறவை, பாலினம் தாண்டிய குற்றமாக மீண்டும் கொண்டு வருவதற்கான குழுவின் பரிந்துரையை அரசு புறக்கணித்திருப்பது ஒரு சாதகமான அம்சம். ஆனால் சிறப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாக இருக்கும்போது பொது தண்டனைச் சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ சேர்க்கப்பட்டிருக்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இலகுவாக சுமத்தக் கூடாது. நடைமுறையைப் பொறுத்தவரையில், குற்றம் எங்கு நடந்தாலும் ஒரு காவல்துறை அதிகாரி முதல் தகவலறிக்கை பதிவு செய்வதற்கான
ஏற்பாடோடு சோதனைகள் மற்றும் பறிமுதல்கள் பற்றிய விசாரணை மற்றும் வீடியோகிராஃபியில் தடயவியலைப் பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பது சில வரவேற்கத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. புதிய குற்றவியல் நடைமுறை 15 நாள் வரம்பைத் தாண்டி போலீஸ் காவலை அனுமதிக்கிறதா அல்லது ஒரு நபர் கைது செய்யப்பட்ட முதல் 40 அல்லது 60 நாட்களுக்குள் எந்த நாட்களிலும் 15 நாள் காலத்தை அனுமதிக்கும் ஒரு விதி மட்டும்தானா என்பதை தெளிவுபடுத்தத் தவறியது ஒரு குறிப்பிடத்தகுந்த தோல்வி. குற்றவியல் நீதி அமைப்பின் அனைத்து போதாமைகளையும் நிவர்த்தி செய்யும் ஒரு சட்ட கட்டமைப்பிற்கான தொலைநோக்கு பார்வை இல்லாமல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய முடியாது.