பி.ஏ.2.86 ஓமிக்ரான் பரம்பரையின் வழித்தோன்றலான ஜே.என்.1 மாறுபாட்டின் பரவல் உலகளவில் வேகமாக பரவி வருகிறது. 27 சதவீதத்தைத் தாண்டி இந்த மாறுபாடு ஒரே மாதத்தில் எட்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த வருடம் ஆகஸ்ட் பிற்பகுதியில் லக்சம்பர்க்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஜே.என்.1 மாறுபாடு, இப்போது ஒரு சில நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறியிருக்கிறது. இந்த மாறுபாடு உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கிறது. தாய் பரம்பரை பிஏ.2.86 உடன் ஒப்பிடும்போது, ஜே.என்.1 மாறுபாடு ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வை (எல் 455 எஸ்) கொண்டிருக்கிறது. இதனால் அது நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது. மற்ற ஓமிக்ரான் துணை பரம்பரைகளைப் போலவே, ஜே.என்.1 மாறுபாட்டிலும் அதிக பரவல் இருக்கிறது. இதனால் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம், வைரஸ் பரவுவதை இன்னும் எளிதாக்கும். அதிகரித்த நோயெதிர்ப்பு தப்பிக்கும் திறன் மற்றும் பரவும் திறன் இருந்தபோதிலும், இதுவரை பெரிய வெடிப்பு எதுவும் பதிவாகவில்லை. பெரும்பாலான நாடுகளில் ஜே.என்.1 மாறுபாடு இருப்பதாலும், அதன் வேகமாக அதிகரித்து வரும் பரவலாலும் தூண்டப்பட்டு, உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்பு ஜே.என்.1 ஐ ஒரு தனி மாறுபாடாக வகைப்படுத்தியது; இதற்கு முன்னர் ஜே.என்.1 பி.ஏ.2.86 இன் ஒரு பகுதியாக கண்காணிக்கப்பட் நிலையில் இப்போது பி.ஏ.2.86 பரம்பரையின் “பரந்த பெரும்பான்மையாக” அது இருக்கிறது. கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு பிற சுற்றில் இருக்கும் மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது ஜே.என்.1 அதிகரித்த நோய் தீவிரத்துடன் தொடர்புடையது அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறது. ஜே.என்.1 மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் அதிகரிப்பு பதிவாகியிருக்கும் நாடுகளிலிருந்து கிடைக்கும் சான்றுகளின்படி அதிக இறப்புகள் நடக்கவில்லை.
ஜே.என்.1 மாறுபாட்டால் ஏற்பட்ட முதல் கோவிட் -19 வழக்கு கேரளாவில் வழக்கமான சோதனைகளின் போது கண்டறியப்பட்டிருந்தாலும், மிக அதிக அளவிலான இந்த வகை கோவிட் வழக்குகள் கோவாவிலேயே பதிவாகியிருக்கின்றன. கோவாவில் இந்த வகை கோவிட்டால் 19 பேர் இதுவரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை மொத்தம் 21 ஜே.என்.1 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட 21 பேருக்கும் நோய் மருத்துவ ரீதியாக லேசானவையாகவே இருக்கின்றன என்பதோடு வீட்டு தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்கிறது. கடந்த பதினைந்து நாட்களில், இந்தியாவில் கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கையில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியிருக்கிறது. இந்த நேரத்தில் உலகளவில் முகக்கவசம் கண்டிப்பாக கட்டாயமாக்கப்படக்கூடாது என்றாலும், அதிக ஆபத்துள்ள நபர்கள் குறிப்பாக மோசமான காற்றோட்டமுள்ள, மூடிய இடங்களில் முகக்கவசம் அணிவது மிகவும் தேவையானதாக இருக்கிறது. காரணம், இணை நோய்கள் உள்ளவர்களின் கோவிட் -19 இறப்புகள் இன்னும்
இந்தியாவில் பதிவாகி வருகின்றன. இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் உள்ள அனைத்து நோயாளிகளும் கோவிட் -19க்கு பரிசோதிக்கப்படுவதும் திருத்தப்பட்ட கண்காணிப்பு வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக கோவிட் உறுதிபடுத்தப்பட்ட வழக்குகள் வரிசைப்படுத்தப்படுவதும் வரவேற்கத்தகுந்த ஒரு நடவடிக்கை. அதே போல புதிய வகைகளுக்கான மரபணு வரிசைமுறையில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இறுதியாக, இந்தியா கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு அதிக வழக்குகள் மற்றும்/அல்லது புதிய மாறுபாடுகளை பற்றி புகார் தெரிவிக்கும் மாநிலங்களை அவமானப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். சிறந்த கண்காணிப்பு, சோதனைகளோடு பதிவு செய்வதில் அதிக நேர்மையை வெளிப்படுத்தும் மாநிலங்கள் இயல்பாகவே அதிக வழக்குகளை பதிவு செய்யும். பொது சுகாதாரம் என்பதை மதவாதப்படுத்தப்படுவதோ அரசியல்படுத்தப்படுவதோ கூடாது.