தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. தலைமையிலான ஆளும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு வழங்கியிருப்பது, ஆளுநருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும் இடையிலான முறிந்த உறவின் மற்றொரு பிரதிபலிப்புதான். அவர்களுக்கிடையில் உள்ள முரண்களைத் தாண்டி கொஞ்சம் முயற்சியும் இரு தரப்பிலும் கொஞ்சம் புரிதலும் இருந்திருந்தால் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடக்காமல் தவிர்த்திருக்கலாம். “வெளிப்படையாக (தமிழ்நாடு அரசின்) கொள்கைகளோடு பொதுவில் முரண்படுவதாகவும் தேவையில்லாமல் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவதாகவும்” ஆளுநரின் நடவடிக்கைகள் பற்றி அந்த மனு விமர்சித்திருந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் ஒப்புதலுக்கு காத்திருக்கும் 20 மசோதாக்களில், இப்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் ‘நீட் விலக்கு மசோதா’ என்று அழைக்கப்படும் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தமிழ்நாடு சேர்க்கை (2021) மசோதா தொடர்பான ஆளுநரின் அணுகுமுறையை எதிர்பார்த்தது போலவே மனு விமர்சித்திருந்தது. மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கு பதிலாக முதல் சந்தர்ப்பத்திலேயே அதை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்புவதற்கு திரு.ரவி எடுத்த முடிவு “ஆளுநருக்கு வகுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளை தாண்டியது” என்று கூட்டணி வாதிட்டது. ஆனால் தேவையற்ற முறையில் இந்த கூட்டறிக்கை, சனாதன தர்மம், திராவிட மரபு, தமிழ் பெருமை மற்றும் திருக்குறள் போன்றவற்றைப் பற்றி நிர்வாகத்துக்கு தொடர்பில்லாத ஆளுநரின் கருத்துகளுக்கும் கடுமையான ஆட்சேபணைகளை தெரிவித்திருந்தது. செப்டம்பர் 2021ல் பொறுப்பேற்றதிலிருந்து, நாகாலாந்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரு. ரவி நீட் விலக்க மசோதாவால் தி.மு.கவின் கோபத்துக்கு ஆளாகியிருந்தார். கூடவே, மும்மொழி கொள்கை மற்றும் தேசிய கல்வி கொள்கையின் தீவிரமான ஆதரவாளராக அவர் தன்னை காட்டிக்கொள்வது மாநிலத்தில் பல கட்சிகளுக்கு ஏற்புடையதாக இருக்காது.
ஒரு ஜனநாயக அமைப்பில் முரண்பாடான கருத்துகளை கொண்டிருப்பது முற்றிலும் நியாயமானது என்றாலும், அரசியல் சாசனத்தின் எழுத்து மற்றும் உணர்வை பின்பற்றும் விதத்திலேயே அரசியல் சாசனம் வழங்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவருடைய பதவியின் சரித்தன்மையை தாண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை தேவையில்லாமல் தூண்டிவிட்டு எதாவது ஒரு பிரச்னையில் தன்னுடன் மோதல் போக்கை உருவாக்குபவராக ஆளுநர் பார்க்கப்படகூடாது. அரசியல் சாசனத்தின் வரம்புகளுக்குள் செயல்படுவதை நிறுவுவதற்கு திரு. ரவி இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அரசியல் ரீதியான பின்புலம் இல்லாத நிலையில், பல ஆளுநர்கள் போலல்லாமல் திரு. ரவி நியாயமானவராக, சார்பற்றவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ள இடத்தில் இருக்கிறார். இதற்கிடையில், ஆளும்கட்சி உள்ளிட்ட விமர்சகர்கள் ஆளுநரின் ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க வேண்டும். ஆளுநருடனான தொடர்ச்சியான மோதலில் ஈடுபடுவதையே அவர்கள் விரும்புவதான ஒரு தோற்றத்தை அவர்களின் எதிர்வினைகள் உருவாக்கக் கூடும். ஆளுநர் என்கிற அமைப்புக்கும் மாநில அரசுக்கு இடையிலான உறவுகள் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலேயே இயங்கி வளர முடியும். இல்லையென்றால் நிர்வாகத்தை வலுவிழக்கச் செய்து தமிழ்நாடுதான் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
This editorial has been translated from English, which can be read here.
Published - November 10, 2022 11:48 am IST