கள யதார்த்தங்கள் பற்றிய போதிய அறிவு இல்லாத கொள்கைரீதியான குறுக்கீடுகள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுய திருப்திக்கான செயல்பாடாகவே மாறிவிடும். இதன் காரணமாக, யாரை இலக்காக கொண்டு இந்த குறுக்கீடுகள் நிகழ்த்தப்படுகின்றனவோ அந்த குழுக்களுக்கு போதிய பலனோ, முழுமையான பலனோ கிடைக்காமல் போகலாம். நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் போதாது. அது குறிப்பிட்ட சூழலில் சரியான விஷயத்தை செய்ய வேண்டும் என்கிற புரிதலோடு பொருந்திப்போக வேண்டும். குறிப்பாக குழந்தைகள் தொடர்பான விஷயத்தில், குழந்தைகளை மையப்படுத்திய கொள்கைகளே வழிகாட்டிகளாக செயல்பட வேண்டும். கைவிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை தத்தெடுக்கும் செயல்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சமீபத்தில் நாடாளுமன்ற குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை, இந்த அளவுகோள்களை நிறைவேற்றுமா என்கிற கேள்வி இன்னம் கூடுதலாக விவாதிக்கப்பட வேண்டியது.
பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சமீபத்தில் “காப்புரிமை மற்றும் தத்தெடுப்பதற்கான சட்டங்கள் குறித்த ஒரு மதிப்பீடு” என்ற அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தத்தெடுக்க வேண்டி காத்திருப்போருக்கும், தத்தெடுக்க சட்டப்பூர்வமாக தயாராக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் இடையில் உள்ள பெரிய இடைவெளியை சுட்டிக் காட்டியது. அதற்கு ஒரு தீர்வாக “தெருக்களில் அனாதைகளாக, கைவிடப்பட்டவர்களாக பிச்சையெடுக்கும் குழந்தைகளை விரைவிலேயே தத்தெடுக்க தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் சொன்னது. அதை செய்ய வேண்டுமென்றால், மாவட்டம் தோறும் அனாதைகளாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காண்பதற்கு குறிப்பிட்ட கால அளவுகளில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான அனாதைக் குழந்தைகள் இருக்கும் ஒரு நாட்டில், வெறும் 2,430 குழந்தைகளே தத்தெடுக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை சொன்னது. தத்தெடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட தத்தெடுக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம் என்பது உண்மைதான்; அது எப்போதுமே அப்படிதான் இருந்திருக்கிறது என்றாலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது நிச்சயமாக கையாளப்பட வேண்டிய ஒரு பிரச்னை.
அறிக்கை அளிக்கும் தகவல்களின்படி, டிசம்பர் 2021ஆம் தேதியன்று மத்திய தத்தெடுக்கும் வள ஆணையத்தில் (Central Adoption Resource Authority - CARA) தத்தெடுக்க விரும்பி பதிவுசெய்த வருங்கால பெற்றோர்களின் எண்ணிக்கை 27,939. 2017ல் இந்த எண்ணிக்கை 18,000ஆக இருந்தது. அனாதைகளாக, கைவிடப்பட்டவர்களாக, விட்டுச்செல்லப்பட்டவர்களாக குழந்தைகள் நல காப்பகங்களில் சுமார் 6,996 குழந்தைகள் தத்தெடுக்க கூடிய வகையில் இருக்கிறார்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த குழந்தைகளுள் வெறும் 2430 குழந்தைகளையே சட்டப்படி தத்தெடுக்க தகுதியானவை என்று குழந்தைகள் நலக் குழுக்கள் அறிவித்திருக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களில் தத்தெடுப்பதற்கான காத்திருப்பு கால அவகாசம் ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்களாக அதிகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. 2021-22ல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 3,175.
மிக அதிகமான முறைகேடுகளும் வேறு நாடுகளில் இருந்து இங்கே வந்து தத்தெடுப்பதில் மோசடிகளும் நடந்ததாலேயே, அதை கட்டுபடுத்தும் வகையில் தத்தெடுக்கும் நடைமுறை செயல்பாட்டு ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடினமாக்கப்பட்டது. நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் நடக்கும் தத்தெடுப்புகளை கண்காணிக்கவும் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் மத்திய தத்தெடுக்கும் வள ஆணையம் ஒரு மைய நிறுவனமாக மாற்றப்பட்டது. தத்தெடுப்பு, குழந்தைகளின் நலன் சார்ந்தே இருக்கிறது என்பதையும் எந்தவிதமான சட்டமீறலும் இல்லை என்பதையும் உறுதி செய்ய கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்டன. காப்பகத்தில் இருக்கும் ஒரு குழந்தை ஒரு வீட்டை சேரும் போது அங்கு உடனடியாக ஒரு மகிழ்ச்சி உருவாகிறது என்று நாடாளுமன்ற குழு சொல்கிறது. ஆனாலும் எச்சரிக்கையுணர்வுடன் இருப்பதும் முக்கியம்.
சூழ்நிலைகள் காரணமாக அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை இந்த நாடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லைதான். ஒரு விஷயத்தை நிறுவனமயப்படுத்தும்போது, அது பிரச்சனைக்குரியதாக மாறிவிடுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், குழந்தைகள் நலனின் நுணுக்கமான சில அம்சங்களிலும் அதே அளவு கவனத்தை செலுத்த வேண்டும். குழந்தைகளை மையப்படுத்திய தத்துவம்தான் அதை வழிநடத்த வேண்டும். அனாதையாக, விடப்பட்ட குழந்தைகளுக்கு எந்த தீங்கும் நேரக் கூடாது என்பதை உறுதி செய்வதில் எந்தவொரு குறுக்குவழியும் கிடையாது.
This editorial in Tamil has been translated from English which can be read here.
Published - August 18, 2022 11:34 am IST