செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத்துக்கு இடைக்கால பிணை வழங்கியதன் மூலம், அவரது விடுதலையை கடுமையாக எதிர்த்த குஜராத் அரசின் முயற்சிகளை உறுதியாக நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் உயரதிகாரிகளின் பங்கு குறித்த புகார்களை திருமிகு. செதல்வாத் விடாபிடியாக தொடர்ந்ததன் காரணமாக, அவரை கைது செய்வதில் தீவிர ஆர்வம் காட்டியது குஜராத் அரசு. தற்போது நீதிபதி யூ.யூ. லலித் தலைமையிலான அமர்வு பிறப்பித்திருக்கும் பிணை உத்தரவில் நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இனி தொடர்ச்சியாக பிணை வழங்கலாமா வேண்டாமா என்பதை குஜராத் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும். ஆனால் இந்தத் தீர்ப்பின் உண்மையான முக்கியத்துவம் வேறு. கொடூரமான மத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் நீதி கோரும் முயற்சிகளில் பாதிக்கப்படவர்களுக்காக உதவி செய்ததன் பொருட்டு சிறைக்குள்ளேயே அவரை வைத்திருக்க வேண்டும் என கடும் முயற்சிகளை செய்த ஒரு அரசின் கோரிக்கைக்கு எதிராக வழங்கப்பட்ட இந்த பிணை ஒரு வலிமையான எதிர்வினை என்பதுதான் அதன் முக்கியத்துவம். அப்போது முதல்வராயிருந்த மோதியை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அப்போதைய தனது உத்தரவில் திருமிகு. செதல்வாத் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட பரிந்துரைத்தது. தனது கணவரும் முன்னாள் எம்.பியுமான இஷான் ஜாஃப்ரியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருந்த சாக்யா ஜாஃப்ரி உள்ளிட்ட பலருக்கும் குறிப்பாக அகமதபாதில் இருந்த குல்பார்க் சொசைட்டியில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருமிகு. செதல்வாத் உதவியதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பிரச்னையை அப்படியே கொதிநிலையில் வைத்திருப்பதாக மோசமாக குற்றம் சாட்டியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில், ஆவணங்களை போலியாக தயாரித்து, அரசியல் தலைவர்களை தொடர்புப்படுத்துவதற்காக நீதிமன்றத்தில் போலி சாட்சிகளை கொண்டு வந்த பெரிய சதியில் மூவருக்கும் பங்கு இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.
வாதங்களின் போது மாநில அரசை பிரிதிநிதித்துவப்படுத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் சில கடுமையான, முக்கியமான கேள்விகளை எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம், பிணை வழங்கும் வழக்கை விசாரிக்க வழக்கத்திற்கு மாறாக நீண்ட அவகாசத்தை எடுத்துக் கொண்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கும் போது திருமிகு. செதல்வாத் உச்ச நீதிமன்றத்தை நாடியது குறித்து ஆட்சேபனை எழுப்பினார் அரசு தலைமை வழக்கறிஞர். ஆனால் இவ்வளவு நீண்ட காலம் ஒரு வழக்கு தள்ளிவைக்கப்படுவதன் பொருட்டு அது மீண்டும் விசாரணைக்கு வரும் வரையில் இடைக்கால பிணை வாங்கலாம் என்று அமர்வு கருதியது. தனது கருத்துகள் எதனாலும் பாதிக்கப்படாமல் உயர் நீதிமன்றம் சுதந்திரமான ஒரு பார்வையை முன்னெடுக்கும் என்பதையும் அமர்வு தெளிவுப்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண் என்ற அடிப்படையில் சட்டம் வழங்கும் ஒரு சலுகையையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்திருப்பதுபோல தெரிகிறது. ஆவணங்களை போலியாக தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது 2012ஆம் ஆண்டுக்கு முன்பு என்பதையும் திருமிகு. செதல்வாத் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்ததோடு, ஏழு நாட்கள் சிறையில் விசாரிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதே சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் சரியாகவே முடிவெடுத்திருக்கிறது. தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவான கள செயல்பாடுகள் இரண்டையும் மதிப்பவர்கள், திருமிகு. செதல்வாத்துக்கு வழங்கப்பட்ட இந்த நிவாரணத்தை வரவேற்க வேண்டும்.
This editorial in Tamil has been translated from the English which can be read here.