பாலியல் வல்லுறவுகளிருந்து மீண்டவர்களுக்கு, அதிர்ச்சி மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட கால அளவுகளில் வரும். முதலில் மிக மோசமான அந்த வன்முறை நிகழ்ந்த பின்னர் அதைப் பற்றி புகாரளிக்க வேண்டிய கடினமான செயலை செய்ய வேண்டி வரும். பல வருடங்களாகவே பாதிக்கப்பட்டவர்கள் மீதான விரல் பரிசோதனை காரணமாகவே பாலியல் குற்றங்கள் பற்றி புகாரளிக்க முன்வருவதில் தயக்கம் இருந்தது. விரல் பரிசோதனை, அப்பட்டமான தனிநபர் உரிமை மீறலாக மட்டுமில்லை, கொடுமையிலும் கொடுமையான ஒன்றாக இருந்தது. திங்கள் கிழமையன்று இந்த நிலையை சரி செய்யும் நடவடிக்கையை எடுத்தது உச்ச நீதிமன்றம். பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வல்லுறவு குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீது ‘இரண்டு விரல்’ அல்லது ‘மூன்று விரல்’ ஊடுருவும் பரிசோதனையை மேற்கொள்பவர்கள் தவறான நடத்தையில் ஈடுபடும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என்றது. விரல் பரிசோதனையை பிற்போக்குத்தனமானது என்று சொன்ன நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “இந்த சோதனை என்று சொல்லப்படுவது எந்தவொரு அறிவியல் அடிப்படையை கொண்டிருக்கவும் இல்லை, பாலியல் வல்லுறவு பற்றிய குற்றசாட்டுகளை நிரூபிக்கவோ மறுக்கவோ செய்யவும் இல்லை” என்றது. பதிலாக, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பெண்களை அது மீண்டும் பாதிப்புக்குள்ளாக்கவும், துன்பத்துக்குள்ளாக்கவும் செய்கிறது எனவும் “அவர்களது மாண்பை அவமதிப்பதாகவும்” அமர்வு சொன்னது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 375வது பிரிவின் படி பாலியல் வல்லுறவு நடந்ததா என்று தீர்மானிக்கும் நோக்கங்களுக்கு ஒரு பெண் ‘பாலியல் உறவில் ஈடுபடுபவராக, பாலியல் உறவுக்கு பழக்கப்பட்டவராக இருக்கிறாரா’ என்கிற கேள்வி பொருத்தமற்றது என்றும் உச்ச நீதிமன்றம் சொன்னது. பாலியல் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவை செய்ய முடியாது என்கிற தவறான அனுமானத்தின் அடிப்படையாக விரல் பரிசோதனை இருக்கிறது எனவும் “ஒரு பெண் தான் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாகச் சொல்லும் போது அதை நம்பாமல் இருப்பது
ஆணாதிக்க, பாலுறவு சார்பான பார்வையை கொண்டது” எனவும் நீதிமன்றம் சொன்னது.
இந்திய சாட்சியச் சட்டத்தில் பிரிவு 53 ஏ சேர்க்கப்பட்ட போது அதிலிருந்த ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அது, “பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குணம் அல்லது யாருடனும் அவரது முந்தைய பாலியல் அனுபவம் பற்றிய சான்றுகள் எவையும் ஒப்புதல், அல்லது ஒப்புதலின் தரத்துடன் தொடர்புடையதாக இருக்க கூடாது” என்கிறது. விரல் பரிசோதனையை மேற்கொள்ள கூடாது என்று சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் இந்த பரிசோதனை முறை இன்னும் நடைமுறையில் இருப்பது பற்றி வருத்தம் கொண்ட நீதிமன்றம், அந்த செய்தியை பரவலாக்க மத்திய மாநில அரசுகள் தம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றது. பாலியல் வன்முறையிலிருந்து மீண்டவரை பரிசோதனை செய்யும் போது விரல் பரிசோதனையை மேற்கொள்ள கூடாது என்பதை மருத்துவ மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவது உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளையும் அரசுகள் எடுக்க வேண்டும் என்றது நீதிமன்றம். 2012ல் நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்குக்கு பிறகான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையிலும் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பொருத்தவரையில் நிலைமைகள் பெரிதாக மாறவில்லை. களங்கம் மற்றும் பலவிதமான தப்பெண்ணங்களையும் எதிர்த்து அவர் போராட வேண்டியிருக்கிறது. தவிர மிக முக்கியமாக, தாக்குதல்களுக்கு பெண்தான் காரணம் என்கிற அனுமானத்தை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது. பாலியல் வல்லுறவு தொடர்பான புகார்கள் பெரும்பாலும் தரப்படாமலேயே போகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி தண்டனை விகிதமும் (2021ல் 28.6 சதவிகிதம்) குறைவாகவே இருக்கிறது. நுண்ணுணர்வுடன் பாகுபாடு இல்லாமல் நடந்து கொண்டு அதன் மூலம் பெண்கள் பாலியல் வல்லுறவு பற்றிய புகார்களை தரும் போது நீதியையும் மாண்பையும் பெறுவதற்கான வழியை உறுதி செய்வது இப்போது அரசுகள், மருத்துவ மையங்கள் மற்றும் காவல் நிலையங்களின் கைகளிலேயே இருக்கிறது.
This editorial has been translated from English, which can be read here.