தேர்தலை எதிர்கொள்ளும் ஒரு மாநிலத்தில் விளையாட்டுகள் மூலம் மக்களை அடையும் ஒரு முயற்சியாக 36வது தேசிய விளையாட்டு போட்டிகளை தம் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர், வதோதரா, சூரத், பாவ்நகர், ராஜ்கோட் ஆகிய ஆறு நகரங்களில் குறுகிய காலத்தில் நடத்தித்தர தானாக முன்வந்தது குஜராத் மாநில அரசு. பிற மாநிலங்கள் இதற்கான தயாரிப்பு பணிகளுக்கு பல வருடங்கள் செலவு செய்ததையும், பல முறை தள்ளிப்போடப்பட்ட பின்னர் கோவாவில் நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டதையும் பார்க்கும்போது இப்படியொரு மிகப்பெரிய போட்டியை நடத்துவதில் குஜராத் எதிர்கொள்ள வேண்டியிருந்த மிகப்பெரிய சவாலை உணர முடிந்தது. 2017ல் ஆசிய தடகளப் போட்டிகளை மூன்று மாதங்களில் ஏற்பாடு செய்து ஒதிஷா ஒரு புதிய சாதனையை படைத்திருந்தது. அதே கால அவகாசத்தில் ஒரு பலதுறை விளையாட்டு போட்டியை நடத்தியதன் மூலம் அந்தச் சாதனையை சமன் செய்திருக்கிறது குஜராத். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்வது ஒரே கட்சி என்பதால் – பாரதிய ஜனதா கட்சி – போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளில் எந்த சிக்கலும் இல்லாமல் இருதரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பு இருந்தது. கடைசியாக இந்த போட்டிகள் ஏழு வருடங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்தன. ஒரு லட்சம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய மிகப்பெரிய விளையாட்டரங்கமான அகமதாபாதில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டரங்கத்தில் வியத்தகு வகையில் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. குஜராத்தின் பண்பாட்டு பாரம்பரியம், எப்படி நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு இணைகிறது என்பதை விளக்கும் ஒரு ஒலி-ஒளி காட்சியாக அது இருந்தது. தொடக்க விழாவை நேரடியாக மிகைமெய் காட்சித் (augmented reality) தொழில்நுட்பம் வாயிலாக தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்ததில் அந்த தொழில்நுட்ப முன்னேற்றம் தெரிந்தது. 35 விளையாட்டு பிரிவுகள் மற்றும் 8000த்துக்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட 36 குழுக்கள் அடங்கிய இந்த போட்டிகளுக்கென பெரிதாக செலவு செய்து கட்டப்பட்டு, பிறகு பயனில்லாமல் போகக்கூடிய புதிய அரங்கங்களை அரசு கட்டவில்லை. மாறாக, ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளையே பயன்படுத்தியது. சர்வதேசத் தரம் வாய்ந்த பொருட்காட்சி மையங்களை உள் விளையாட்டு கட்டமைப்புகளாக மாற்றியது. விளையாட்டு கிராமம் என்ற ஒன்றை கட்டாமல், வீரர்களுக்கு ஹோட்டல்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்ததன் மூலம் மாநிலத்தின் ஹோட்டல் தொழில் வர்த்தக ரீதியில் பயன்பெறுவதை உறுதி செய்தது. இந்திய ஒலிம்பிக் போட்டிகள் என்கிற பெயரில் 1924ல் லாகூரில் தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகள், சுதந்திரத்துக்கு பின்னர் தேசிய விளையாட்டு போட்டிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தனது 98வது ஆண்டிலும், சர்வதேச போட்டிகளுக்கான மேடைகளில் ஏறும் முன்பு முன்னர் இளம் தடகள வீரர்களுக்கு பலவகை விளையாட்டுகளில் பங்கு பெறும் வாய்ப்பையும் மிராபாய் சானு, சிவ தாபா, அவினாஷ் சேபிள் போன்ற சர்வதேச வீரர்களுடன் போட்டி போடும் வாய்ப்பையும் தருகிறது என்கிற அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. குஜராத்தைப் பொறுத்தவரையில் இந்த விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதென்பது எதிர்காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டை நடத்த வேண்டும் என்கிற அதன் குறிக்கோளுடன் ஒத்திசைவு கொண்ட ஒன்றாக இருந்தது. வதோதராவில் சுவார்னிம் குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகத்தை அமைக்கும் முயற்சிகள், விளையாட்டில் தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவிப்பது, மற்றும் விளையாட்டுகள் மூலம் திறன் மேம்பாட்டை
வளர்ப்பது போன்றவை இந்த திசை நோக்கிய நகர்வுகளே. 2022 குஜராத் போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி, விளையாட்டின் மென் அதிகாரத்தை நாட்டின் ஒட்டுமொத்த வளார்ச்சிக்கும் பயன்படுத்துவதே தனது அரசின் நோக்கம் என்று அறிவித்தார். தடகள வீரர்களைப் பொறுத்தவரையில் இந்த தேசிய விளையாட்டுகள் மேலதிக முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக அமையும்.
This editorial has been translated from English, which can be read here.