துயரத்தின் சுமை

மோர்பியில் மரணத்தின் பிடிக்குள் செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

Updated - November 01, 2022 12:21 pm IST

Published - November 01, 2022 11:42 am IST

குஜராத்தின் மோர்பி நகரில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கீழிருந்த மச்சு நதியில் விழுந்தனர். இதில், குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் குறைந்தது 47 பேர் குழந்தைகள் என்பது, இதை இந்தியாவின் மிக மோசமான துயரங்களில் ஒன்றாக்குகிறது. 1879ல் திறக்கப்பட்ட இந்த பாலம், புனரமைக்கப்பட்டு இந்த துயரம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அக்டோபர் 26ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இது பல கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகிறது. துறையில் எந்தவிதமான நிபுணத்துவமோ அல்லது குறிப்பிடத்தகுந்த சாதனைகளோ செய்திருக்காத ஒரு நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. பாலத்தின் திறன் பற்றியும் கேள்விகள் இருக்கின்றன. எப்படி இருந்தாலும் ஒரே நேரத்தில் 150 பேருக்கு மேல் சுமக்கும் திறன் பாலத்துக்கு இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. கூட்டம் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பாலம் இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கானவர்கள் அதன் மேல் நின்று கொண்டிருந்தார்கள். மரணத்தின் பிடிக்குள் செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இவை அனைத்துமே பல நிலைகளில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்ததையே சுட்டிக்காட்டுகின்றன. குஜராத், இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்று. ஆனால் அவ்வபோது அது நிர்வாகரீதியான சவால்களை சந்தித்து வந்திருக்கிறது. கொள்ளை நோயை அது கையாண்ட விதம் ஒரு உதாரணம். மனித தவறுகளும் செயல்பாடுகளும்தான் பெரும்பாலும் இது போன்ற துயரமான விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன. தவிர, இயற்கை பேரழிவுகளின் தாக்கத்தையும் கணிசமான அளவில் மாற்றுகின்றன. தற்போது சந்தேகத்தின் நிழலின் கீழ் வந்திருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணமும் அறிவித்திருக்கிறது. ஒரு முழுமையான விசாரணையும் பொறுப்பேற்பதை நிர்ணயிப்பதும் விரைவாக நடக்க வேண்டும். விசாரணை முடிவுகள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் கடுமையான தண்டனையை பெற வேண்டும். கோவிட்-19 நோயின் காரணமாக பயணங்களின் மீது நீண்ட கட்டுபாடுகள் இருந்தன. இப்போது அதிலிருந்து உலகம் வெளியேறும் நிலையில், மக்கள் பயணங்களில் அதிகமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென் கொரியாவின் சோலில் கடந்த வாரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 154 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தியாவிலும் சுற்றுலா மற்றும் புனிதத் தலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்து வருகிறார்கள். சுற்றுலா மற்றும் பயணங்கள், பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான இயந்திரங்கள் என்றாலும் அவை பாதுகாப்பானவையாகவும் நீடித்தவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்த இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். நாடெங்கிலும் உள்ள சுற்றுலா மற்றும் புனிதத் தல மையங்கள் கூட்ட மேலாண்மையை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவிர இது போன்ற விபத்துகளை தடுப்பதற்கான போதிய பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இது போன்ற தற்செயல் சம்பவங்களையும் எதிர்பார்த்தே அதற்கான தயாரிப்புகளை உள்ளடக்கியே, அதிக மக்கள் கூடக்கூடிய புதிய மையங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும். இமயமலை போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வேகம், புவியியல் வரம்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களின் உள்கட்டமைப்புத் திறனுக்கு ஏற்ப பயணிகளின் வரவை ஒழுங்குபடுத்துவதற்கு இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுற்றுலாவை ஊக்குவிக்கும் பரப்புரைகள், பிரச்சாரங்களில் பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் சேர்க்க வேண்டும்.

This editorial has been translated from English, which can be read here.

0 / 0
Sign in to unlock member-only benefits!
  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products
Sign in

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.