ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தொடங்கி (பிப்ரவரி 24, 2022) ஓராண்டாகியிருக்கும் நிலையில், ஐ.நா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 141 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகளும் (இதில் ரஷ்யாவும் அடங்கும்) விழுந்திருக்கின்றன. 32 நாடுகள் வாக்களிக்கவில்லை (இதில் இந்தியாவும் சீனாவும் அடங்கும்). 70க்கும் மேற்பட்ட நாடுகளால் இறுதியில் முன்வைக்கப்பட்ட அந்தத் தீர்மானம், அல்லது “நியாயமான மற்றும் நீடித்த சமாதானத்திற்கான” அழைப்பு, உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றங்களில் பொறுப்புக்கூறல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைமையில் இந்த தீர்மானத்தை முன்வைத்த நாடுகள், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தற்போதைக்கு அதை விரும்பவும் இல்லை. காரணம், யுக்ரைனின் நிலப்பகுதிகளில் ஐந்தில் ஒன்றுக்கு ரஷ்ய படைகள் உரிமை கோரும் நிலையில், தற்போதைக்கு நிலைமை ரஷ்ய படைகளுக்கே சாதகமாக இருக்கிறது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ், “படையெடுப்பு” என்ற வார்த்தைக்கு பதிலாக ரஷ்யாவின் “சிறப்பு ராணுவ நடவடிக்கைகள்” என்று அழைப்பதற்கும், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதற்கும் பரிந்துரைத்த இரண்டு திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. இதன் விளைவாக, யுக்ரைனில் ஒரு ராணுவ முடக்கம் நிலவினாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தவிர மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் உலகின் பெரும் பகுதியில் ஆதரவையும் பெறவில்லை. இந்த நிலையில் யுக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகள் இந்த வாக்கெடுப்பை ஒரு பெரிய வெற்றி என்றன. மார்ச் 2, 2022 அன்று இதேபோன்ற வாக்கெடுப்பில் அவர்கள் செய்ததைப் போலவேதான் இப்போதும் இருந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்தியா வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. ரஷ்யாவை விமர்சிக்கும் முக்கிய ஐ.நா அமைப்புகளில் எந்தவொரு தீர்மானத்திலும் இந்தியா இந்த நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச மேடைகளில் விளக்கமளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். வியாழன் அன்று ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் வைத்த இந்த வாதங்களின்படி, மோதி அரசு ரஷ்யாவுடனான நீண்டகால உறவை காரணம் காட்டி அதன் வியூகரீதியான விருப்ப உரிமையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய மாணவர்கள் இடையில் சிக்கிக் கொண்டபோது, மோதலில் ஒரு பங்காளியாக மாறுவது பற்றிய அதன் ஆரம்பகால கவலைகளையும் சுட்டிக்காட்டி, “இராஜதந்திரமும் பேச்சுவார்த்தையும்” மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்று வலியுறுத்தியது. கூடுதலாக, மத்தியஸ்தத்திற்கு இடமளிக்க ஒரு “நடுநிலையை” இந்தியா கடைபிடிக்க வேண்டும் என்று கூறியது. ரஷ்யா மீதான ஒருதலைப்பட்சமான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை நிராகரிப்பதற்கும், அந்நாட்டுடனான எரிபொருள் மற்றும் உரங்களின் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் இந்தியா எடுத்த முடிவை, சுதந்திரமாக முடிவெடுக்க இந்தியா விரும்புவதை விளக்கும் வகையில் இருக்கிறது எனலாம். ஆனால் பலதரப்பு அரங்கில் வாக்களிப்பதைத் தவிர்ப்பது ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாடு என்று இந்தியா கருதுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிக்கொண்டு வருகிறது. உண்மையிலேயே இந்தப் படையெடுப்பு சிறிய, இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு என்று தெளிவாகிவிட்டது. ரஷ்யா தொடக்கத்தில் அறிவித்த அதன் வியூகரீதியான இலக்குகளை அடைந்துவிட்ட போதிலும் படையெடுப்பு நிற்கவில்லை. “இந்த காலம் யுத்தத்துக்கான காலம் அல்ல” என்ற பிரதமர் மோதியின் புகழ்பெற்ற வாசகத்தை அதிபர் புடின் பொருட்படுத்தவில்லை. தவிர யுக்ரைன், இந்தியாவை ஒரு பக்கச்சார்பற்ற மத்தியஸ்தராக பார்க்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தியா பல பத்தாண்டுகளாக, கட்டாயத்தின் கீழ் வாக்களிக்காது என்பதை நிறுவியிருக்கிறது. ஆனாலும், இந்தியா அடைய விரும்பும் சர்வதேச மற்றும் பிராந்திய தலைமையை, அடிப்படை கொள்கைகளான இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் உறுதியாக இல்லை என்கிற தோற்றத்தின் மூலம் அடைய முடியாது.
This editorial has been translated from English, which can be read here.