அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைக் கையாள்வதில் ஒழுங்குமுறை அமைப்புகள் தோல்வியடைந்தனவா என்பது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சந்தேகத்திற்கு இடமின்றி வரவேற்பது கடினமான ஒன்று. இந்தக் குழு அமைக்கப்பட்டதால், இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் அதிகாரம் பறிக்கப்படாது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பது நல்ல விஷயம். கூடுதலாக, இந்த நிறுவனங்கள் குறைந்தபட்ச பொது பங்குகளை தங்கள் வசம் வைத்திருக்கத் தவறிவிட்டன அல்லது நிறுவனம் தொடர்புடைய தரப்பினர் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை வெளிப்படுத்தத் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டையும் செபி விசாரிக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. செபி இந்த விவகாரம் பற்றி ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து அறிந்து வைத்திருப்பதாகச் சொல்லும் நிலையில், அது தொடர்பாக அந்த அமைப்பை பொறுப்புக்குள்ளாக்கியிருப்பதோடு, இந்த நிறுவனத்தோடு சம்பந்தப்பட்ட தரப்பினரால் கட்டுப்படுத்தப்பட்ட நிதியை பயன்படுத்தி பங்கு விலைகளில் ஏற்ற - இறக்கங்கள் செய்யப்பட்டன என்கிற குற்றசாட்டை விசாரிக்க அதன் வரம்பை விரிவுப்படுத்துவது வரையில், இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழு தேவையா என்பதும் பொருத்தமான ஒரு கேள்வி. செபி தனது விசாரணை முடிவுகளை இந்தக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஒழுங்குமுறை அமைப்பின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்கு முன்பு குழு தானாகவே குற்றசாட்டுகளை ஆராய்வதை தவிர்க்க முடியுமா என்பது சந்தேகமே. செபியின் விசாரணையை கண்காணித்து அதில் உள்ள முன்னேற்றங்களை அறிக்கைகளாக கோரியிருந்தால் அது இந்த விவகாரத்துக்கு இன்னும் உதவிகரமாக இருந்திருக்கும். தேவைப்பட்டால் இறுதி முடிவை மதிப்பிடுவதற்கு நிரபுணர்களின் உதவியை நாடியிருக்கலாம். நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் மற்றொரு பணி, ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது. இதனை
சட்டமியற்றுபவர்களிடம் விட்டிருக்கலாம். தவிர, சீலிடப்பட்ட கவரில் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் கேட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது போன்ற பல குழுக்களுக்கு நேர்ந்த முடிவுகள், உதாரணத்துக்கு பெகாசஸ் பற்றிய குழு, இந்தப் புதிய குழு பற்றிய நம்பிக்கையை அளிக்கவில்லை. சந்தையின் நிலையற்ற தன்மைக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கண்டறியுமாறு தான் அமைத்த குழுவிடம் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. ஹிண்டன்பர்க் வெளியீடுகளை தொடர்ந்து சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள், இந்த நிறுவனங்களின் நடத்தையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான கருவியாக மாறிவிடக் கூடாது. முதலீட்டாளர் பாதுகாப்பு என்பது செபியின் செயல்பாடுகளின் ஒரு பகுதி. ஆனால், நடப்புகளை ஒட்டி நுண்ணுணர்வுடன் ஏற்ற - இறக்கங்களைச் சந்திக்கும் சந்தை சக்திகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் உத்திரவாதமாக இருக்க முடியாது என்பதும் உண்மைதான். பங்குச் சந்தை முதலீடுகளில் ஒரு உள்ளார்ந்த, நிரந்தர ஆபத்து இருக்கிறது. பல்வேறு வழிகளில் ஒழுங்குமுறை கண்ணோட்டத்திலிருந்து அது சரி செய்யப்படுகிறது. விதிமுறைகளை பரிந்துரைத்தல் மற்றும் தினசரி விலை இயக்கங்களின் மேல் மற்றும் கீழ் வரம்புகளை அமைப்பதை வெளிப்படையாக்குவதை கட்டாயப்படுத்துதல் ஆகியவை மூலமாக இது செய்யப்படுகிறது. அதானி குழுமமும் - இந்த சர்ச்சை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பும் அரசும் கூட - முதலீட்டாளர்களின் இழப்புகளை முன்னிலைப்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம். விரோத மனப்பான்மை கொண்ட ஒரு பங்கு வர்த்தகர், நாட்டுக்கும் அதன் வணிக முன்னோடிகளுக்கும் எதிராக செய்த சதி என்று குற்றம் சாட்டுவதன் மூலம் விரைவாக இதிலிருந்து விடுதலையும் பெறலாம். ஆனால் நீதிமன்றத்தின் கவனம் செபியின் நடத்தை மற்றும் சுயாதீனமான செயல்பாட்டின் மீது இருக்க வேண்டும். அது மட்டுமே முதலீட்டாளர்களை சந்தை மோசடியாளர்களிடமிருந்து பாதுகாக்க முடியும்.
This editorial has been translated from English, which can be read here.